Tuesday, November 1, 2016

என்றெழுவாய் சகோதரி?

என்றெழுவாய் சகோதரி?
தினம் இரண்டாய் அவளைத்
தேடியது மனம்..
உதிரத் தொடர்பு இல்லையெனினும்
உறுத்துகிறது மனதில்..
அவள் ஏனோ
இரண்டு தினங்களாய்
தென்படவேயில்லை..
இரண்டாம் நாள் கேட்டேன்
எங்கேஅவள் என்று.
ஏதோ உடலுபாதையாம்
சொல்லிவிட்டிருந்தாள்.
மூன்றாம்நாள்
முகம்கண்டு
மூர்ச்சையானேன் .
உதிரச் சிவப்பில்
உருக்குலைந்த கண்கள்..
கன்னிப்போன கன்னமும் உதடும்..
உயிர்போகும் விபத்தில்
மயிரிழையில் தப்பியவள்போல
மங்கை என் தங்கை..
ஏனடி தங்காய்
எமனடி பிழைத்தாயோ?
ஊனெலாம் நோகவே
உயிருடன் மீண்டாயோ?
இல்லைஅண்ணா
இதுஅவர் தந்தபரிசு..
யாரம்மா அந்த அவர்?
அப்பனின் ஆணைக்கு
தப்பனின் கயிற்றிற்கு
தலையன்று குனிந்தவள்
எழவில்லை இன்றுவரை அண்ணா
வேலைக்குச் செல்லாமல்
வெட்டியாச் சுற்றுவார் பின்
மாலை வந்துவிட்டால்-மதுச்
சாலை சென்றிடுவார்
முட்டக் குடித்துவிட்டு
முட்டுவார் என்தலையை
முற்றச் சுவற்றில் அடிக்கடி
அன்றுதான் கொஞ்சம்
அதிகம் அண்ணா..
ஏனம்மா இக்கொடுமை
எதிர்த்திடவே உன்வீட்டில்
எவரும் இல்லையோ?
இருந்தென்ன அண்ணா?
வீட்டில் இருப்பவர்களுக்கு
விருந்தல்லவா இச்செயல்?
அப்பனின் வீடோ
அடைக்கலம் அற்றது.
இருப்புத் தடியால்
இடித்தது போலவே
இருக்குதம்மா உன்முகம்..
இப்படியொரு
இன்னலின்
இறுதிதான் என்ன?
எதுவும் தெரியவில்லை
எனக்கு அண்ணா.
இரண்டு பிள்ளைகளையும்
எப்படியோ வளர்க்கணும்
அப்பனில்லா அவலநிலை
அவர்களுக்கு வேண்டாமே அண்ணா.
அது எனக்கும்
ஆபத்துதானே அண்ணா?
அவரில்லா வீடென்றால்
மோந்துபார்க்க
எத்தனயோ நாய்க்கூட்டம்
அதனால் போகட்டும் அவர்தானே..
உதிரமாய் உதிர்ந்தது அவள் கண்ணீர்..
வருகிறேன் அண்ணா.
அவருக்கு இதுகூட
அடிக்கக் காரணமாகும்.
அப்புறம்
அதற்கொருமுறை
ஆரம்பம் இருக்கும்.
உடலில் வலுவில்லை.
இந்தியாவிற்கு கிடைத்த
இனிய விடுதலை
இன்னும்
இல்லங்களுக்குச்
செல்லவில்லை.
சட்டங்கள் இருந்தென்ன?
தண்டனைகள் இருந்தென்ன?
வந்தால் காப்பேன் என்பதா அரசு?
எனக்கென்ன என்றே இருப்பதா சுற்றம்?
ஊரே நாறுகிறது.
தனியாய்ப் பெண்ணொருத்தி
வாழவே வழியற்று,
இந்த
ஊரே நாறுகிறது...
அந்த நாற்றத்திலும்
ஊறும் புழுக்களாய் நாம்..
வளர்ந்த சமுதாயத் தூண்களாய்
நாளைய உலகின் விடிவெள்ளிகளாய்..
மூக்கைப் பிடித்துக்கொண்டே
நகர்கிறோம்..

மெல்லச் சாகிறாய் நீ... (Inspired by the poem "you are dying slowly" by Pablo Neruda

As inspired by the poem "You start dying slowly" by Pablo Neruda and as requested by Mr. Vijayaraghavan Kuppusamy; in Tamil.
மெல்லச்சாகிறாய் நீ...
பயணிப்பதை மறந்தாலோ,
படிப்பதைத் துறந்தாலோ,
பூவுலகின் ஓசைகளை
புறக்கணித்துச் சென்றாலோ,
பலேஎன் றுனையேநீ
பாராட்ட மறந்தாலோ,
மெல்லச் சாகிறாய் நீ...
உனதருமைநீ கொன்றாலோ,
உதவிதருவோரை உதறினாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
பழக்கத்திற்குநீ அடிமையானாலோ,
பாதைமாற்றாது பயணப்பட்டாலோ,
வழக்கங்கள்வழுவி வாழாவிட்டாலோ,
வண்ணம்பலதை அணியாவிட்டாலோ,
புதியவரிடமேநீ பழகாதுபோனாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
இருகண்கள் மளிறவேஉன்
இருதயம் எகிறவைக்கும்
தீராக்காதலதை உணராவிட்டாலோ,
அதன்
தீவிரஉணர்வுகளை தீண்டாவிட்டாலோ,
மெல்லச்சாகிறாய் நீ...
மனமகிழாப் பணிமாற்ற
மெனக்கெடாது வாழ்ந்தாலோ,
நிலையற்றவற்றிற்கு
பாதுகாப்பு வழிவிடுத்து
புரிவேனென்ற புதுமுயற்சி புனையாவிட்டாலோ,
கனவைக் கைபிடிக்க
கடைசிவரை செல்லாதுவிட்டாலோ,
ஒருமுறையேனும் உன்னையேநீ
ஓடிப்பாரடாவென உதைக்காவிட்டாலோ,
மேல்லச்சாகிறாய் நீ...
Translation - Prasanna Venkatesan

Monday, March 12, 2012

வருமா மீண்டும்

பல்விளக்கா பதநீர் 
பாயை சுருட்டாமல் ஏரிக்கரை 
அழகான காலை
ஆனந்தக் குளியல் 
சுடச்சுட இட்டிலி 
சுடும்வெயில் பம்பரம்
குளுமையான குச்சிஐஸ்
கூடவே தின்பண்டம்
வயிர்என்ன எந்திரமோ 
உச்சிவெயில் சாப்பாடு
திண்ணையில் சீட்டுக்கட்டு
திகட்டாத வானொலி
ஒலியும் ஒளியும்
ஞாயிறு திரைமலரும் திரைப்படமும் 
சைகையில் வரும் செய்தியும் 
கோவில் ஒலிபெருக்கி பாட்டு
காப்பியும் முருக்கும்
பாட்டிசொல்லும் கதைகள் 
தூங்க அழைக்கும் அம்மா 
துணையாய் அதட்டும் அப்பா 
படுத்ததும் வரும் உறக்கம் 
விடுமுறை நாட்கள்
வருமா மீண்டும்?

Thursday, February 2, 2012

போகிக் கவிதை.

போகிக் கவிதை.. 
போக்குவோம் சிலதை...

காஞ்சியில் வேலை முடித்து 
திருச்சிக்கு காரில் புறப்பட்டேன்.
மாலை ஐந்துமணி.

ஓரிரு காதை கடந்த பின்னே 
காரின் அச்சை முரிக்குமோர்
கடும் பள்ளம் சாலையில் கண்டேன்..
ஓரிரு மாதம் கடந்திருக்கும் அந்த
பள்ளம் உருவாகி.. 
யாரின் அலச்சியம் இது?

உத்திரமேரூர் அருகே செல்கையில்,
முன்னே ஒருலாரி தழும்பச் சல்லிஅதில்
அருகே செல்கையில் ஆட்டிய பள்ளத்தால் 
சட்டென ஒருகல் என்கார் கண்ணாடிமீது
யாரிடம் கூறுவது?

அரைமணி நேரம் பயணித்து ஓரிடம்
ஆங்காங்கே கடைகளும் மக்களும் 
விர்ரென ஒருவன் பைக்கில் குறுக்கே
அதிர்ந்து பிரேக் அடித்தேன் பதட்டம் பற்றியது.
யார் அவனுக்கு லைசன்சு கொடுத்தது?

ஒருவேளையாக நெடுஞ்சாலை வந்தது
சர்வதேச மாநாட்டிற்கு செல்லும் தலைவர்போல்
சர்..விர்.. என்று பறக்கும் வாகனங்கள்.
சுங்கச் சாவடியில் முன்னே செல்லவே  
மற்றவனை புறந்தள்ளும் கருங்காலிகள்..
எவண்டா அவன பெத்தான்? 

இருள் மங்கியது கருமை 
விளக்கால் விலகியது ஆங்காங்கே.
உயிரைக் காவுகேட்க்கும் சாலை குண்டர்கள்
ஓட்டுனராய் ஆங்காங்கே..
என்னடா வாழ்க்கை இது? 

இதுல என்கூட வந்தவர் செல்லில் 
யாரிடமோ கூறினார்..
"இவர் இன்னைக்கு புறப்பட்டா 
நாளைக்குத்தான் திருச்சி வருவார்.
அவ்வளவு பயந்தாங்கொள்ளி" - என்று..

Friday, September 17, 2010

ஓயாத சண்டை

எல்லை எங்கும் பதற்றம்
யார்பக்கம் நியாயம்?  விளங்கவில்லை

ஒருவன் திடமாய் வரதே என்று
விரட்டுகிறான்.
மற்றவன் விட்டேனாபார் என்று
மிரட்டுகிறான்

படைஎடுப்பவனை தூண்டியும் அடக்கியும்
அயலார் இருவர்

இரவுபகல் ஓயாது தொடர்கிறது சண்டை
அவ்வப்போது மாறிமாறி இருவருக்கும் வெற்றி

இவன் இடத்தில் முன்னர் அவன் இருந்தான் என்றும்
அவன் இடத்தை இவன் விழுங்கி விட்டான் என்றும்
அவ்வப்போது அறிக்கை வேறு

வளத்திலும் பலத்திலும் இருவரும் சளைத்தவர் இல்லை
எப்போதும் ஓயாத தீரவே தீராத எல்லைப்பிரச்சனை
இந்த கடலுக்கும் கரைக்கும்.

Monday, September 6, 2010

சுயதொழில் புரிவோரே


உணவு, உடை, உறைவிடம் கருதாது
உலகினில் உலவும் உவகை பாராது
எண்ணத்தில் இலக்கினை ஏற்றியே நாளெலாம்
எருதினை விஞ்சும் ஏற்றம் கொண்டோரே!

விழியினில் கணமும் அயர்ச்சி கொள்ளாது
வழியினில் வளத்தினை நோக்கியே நாளெலாம்
ஓயாமல் உழைக்கும் ஓங்கிய உள்ளங்களே
ஒருநாளும் உமைவெல்ல உலகினில் ஆளில்லை

விற்பனை தொழிலின் விருட்சங்களே நீங்கள்
பணிவாக யான்கூறும் கூற்றினை கேளீரோ?
வெற்றியது விபத்தல்ல வீரத்தின் விளைச்சல்
முதன்மையது இலகல்ல முயற்சியின் முத்து

ஏதோ வாழ்க்கையல்ல ஏற்றமே வாழ்க்கை
வாழவே உறக்கம் உறக்கம் வாழ்வல்ல
வெற்றியை பகிர்ந்துகொள்ள உறவுவரும் அதுவாய்
உறவுகள் மகிழ வெற்றிவராது அதுவாய்

சிறியதோர் வாய்ப்புகளே பெரியதோர் முடிவாகும்
நம்பிக்கை நனவாகும் நம்பிக்கையே நனவாக்கும்
உவகைகொண்டுவிட்டால் உலகையே மாற்றலாமே
உழைப்பு மட்டும் தீர்க்குமளவு இருக்கும்

எண்ணம் மாறுவதாலே வாழ்க்கை மாறும்
வெற்றிபெற கனவும் உழைப்பும் வேண்டும்
திட்டம் மட்டும் போதாது நம்பிக்கை வேண்டும்
பெரிய செயல்களெல்லாம் இவ்வாறே நடந்தன

ஒருநாளை எவ்விதம் கழிக்கிறோமோ - அவ்வாறே
ஒவ்வொருவரும் வாழ்வை கழிக்கிறோம்
உழைப்பு எப்போதும் மகிழ்ச்சி தருவதில்லை - ஆனால்
உழைப்பு இல்லாத மகிழ்ச்சி நிரந்தரமில்லை

மனிதனின் சிறப்பே செய்யாததை செய்வதே
மகிழ்ச்சியின் துவக்கம் வியர்வையே
இலக்கினை மறந்துவிட்டால்
இரட்டிப்பாய் உழைக்கநேரும்

மலைகளுக்குப்பின் மீண்டும் மலைகள் உண்டு
வெற்றிக்குப்பின் மீண்டும் வெல்லவழி உண்டு
சோதனைகளை சாதனையக்குவதே நமது
உண்மை மரபு.

அதிர்ஷ்ட்டம் என்பது முயற்சியும் சந்தர்பமும்
சந்திக்கும் புள்ளியே அன்றி வேறுதுவுமில்லை
உழைக்காமல் இந்தஉலகம் இல்லை
உழைக்காமல் இந்த உலகம் நமக்கில்லை

துணிவது ஆக்கி, தகுதியை தூக்கி,
அயர்ச்சியை நீக்கி, முயற்சியை ஊக்கி,
வெற்றியை கண்டு, விண்ணையும் வென்று,

அனைவரும் உமையே உதாரணமென  கொள்ளும்
வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்.

Saturday, February 20, 2010

இயற்கை

பூந்தென்றல் சதிராடும் மாலையிலே
பூப்பூவாய்ப் பூத்திடும் சோலையிலே

தாமரைப் பொய்கையில் மீனினங்கள்
தாவிக் குதித்தாடும் மானினங்கள்

இத்தனை சூழ்ந்திடும் வேலையிலே
இளமந்திகள் தாவியே ஆடுதம்மா

ஆடிய ஆட்டத்தில் தேன்துளிகள்
அந்ததாமரைப் பூவினில் வீழ்ந்தவுடன்

செந்தாமரை சிரித்து குலுங்குதம்மா - என்
சிந்தையில் மகிழ்வு பிறந்ததம்மா..